by Staff Writer 24-12-2021 | 4:03 PM
Update: நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது, கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சபையின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
===========================================================================
GMOA பணிப்பகிஷ்கரிப்பு: கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நோயாளர்கள்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் (GMOA) பணிப்பகிஷ்கரிப்பு இன்று (24) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இடமாற்றம் உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள் கடந்த சில நாட்களாக பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மருத்துவ நடவடிக்கைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
இதனிடையே, கண்டி போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்ற போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
தொடர்ந்து நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்திருந்த பெருந்திரளான நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
எவ்வாறாயினும், மாத்தளை இறத்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இதனால் அங்கு வழமை போல நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதனிடையே, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத ஊழியர்கள் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தனர்.
COVID கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.