Laugfs எரிவாயு விநியோகம் ஆரம்பம்

Laugfs எரிவாயு விநியோகம் ஆரம்பம்

by Staff Writer 23-12-2021 | 6:16 PM
Colombo (News 1st) Laugfs எரிவாயு விநியோகம் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முதற்கட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக Laugfs நிறுவனத்தின் தலைவர் கே.எம்.வேகபிட்டிய தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட Laugfs எரிவாயுவின் தரம், சேர்மானம் என்பன உரிய முறையில் காணப்படுவதாக இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தமையால், எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார். எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றம் மற்றும் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, சிலிண்டர்களில் காணப்படும் எரிவாயுவின் சேர்மானங்கள் தொடர்பான இலச்சினையை பொறிப்பதற்கு காலம் தேவைப்படுவதால், சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சிலிண்டர்களில் உரிய இலச்சினைகள் பொறிக்கப்பட்டு விரைவாக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.