மன்னாரில் அதிகரிக்கும் டெங்கு

மன்னாரில் அதிகரிக்கும் டெங்கு; 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 23-12-2021 | 10:37 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மன்னாரில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளத்தை அடுத்து, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், 13 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு மாத காலமாகும் நிலையில், வெள்ளம் வழிந்தோடாமல் பேசாலை, முருகன் கோவில், பேசாலை 100 வீட்டுத் திட்டம், காட்டாஸ்பத்திரி, சிறுத்தோப்பு மற்றும் தலைமன்னார் பகுதிகளை சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமை சுகாதார சீர்கேடுகளுக்கு வித்திடுவதாக மக்கள் கவலை தெரிவித்தனர். பேசாலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையான காலத்தில் சுமார் 150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேசாலை 100 வீட்டுத் திட்டம் பகுதியில் வசித்து வந்த 13 வயதான மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். இதேவேளை, நாட்டின் 11 மாவட்டங்கள் டெங்கு பரவும் சிவப்பு எச்சரிக்கை வலயமாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. கடந்த வருடத்தில் 31,198 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 30,657 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.