கொலை செய்யப்பட்ட சிறுமி கருத்தரித்திருந்ததாக தகவல்

முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி கருத்தரித்திருந்தமை தெரியவந்துள்ளது

by Staff Writer 22-12-2021 | 6:16 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். பிறபுறுப்பில் ஏற்படுத்தப்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே சிறுமியின் மரணம் ஏற்பட்டுள்ளமை முல்லைத்தீவு சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டது. சிறுமி கருத்தரித்திருந்தமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. சிறுமியின் மரணம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.