பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்: கெமுனு விஜேரத்ன

பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்: கெமுனு விஜேரத்ன

by Staff Writer 21-12-2021 | 7:17 PM
Colombo (News 1st) எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் மக்கள் தமது ஆதங்கத்தை வௌிப்படுத்தி வரும் நிலையில், விலை அதிகரிப்பிற்கு அமைவாக பஸ் கட்டணமும் குறைந்தபட்சம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை 80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உணவக மற்றும் பேக்கரி உரிமையாளர்களும் உணவு வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளனர். நேற்றிரவு அரசாங்கம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 177 ரூபாவாக அமைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 207 ரூபாவாக காணப்படுகிறது. டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 121 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலையும் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விலை 159 ரூபாவாக அமைந்துள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 87 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு அமைய, இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் விலைகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாம் விடுத்துள்ள நிவாரண கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் இணங்காவிட்டால், பஸ் கட்டணங்களை 20% முதல் 50% வரை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.