10,000 ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் இல்லை

10,000 ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் இல்லை - நிதி அமைச்சு

by Staff Writer 20-12-2021 | 2:02 PM
Colombo (News 1st) புதிதாக பத்தாயிரம் (10,000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் தவறான தகவல்களை உருவாக்குவதாக செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, அந்நிய செலாவணி கையிருப்பின் அளவை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான திட்டங்களை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ளதாக அதன் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பை விரைவாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார். இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை தொடர்புகொண்டு வினவியபோது, இம் மாத இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி கையிருப்பைத் திரட்ட முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.