காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

by Staff Writer 19-12-2021 | 6:59 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் - இந்துபுரம் பகுதியில் காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்தமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் காதலனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாங்குளம் - இந்துபுரம் பகுதியில் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கி பெண்னொருவர் கொலை செய்துள்ளார். கடந்த 09 ஆம் திகதி விபத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து, குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். 31 வயதான நபரொருவரே இவ்வாறு தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், பிரேத பரிசோதனையில் உயிரிழந்த நபரின் முதுகெலும்பு தாக்கப்பட்டு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பில் சடலத்தை அடக்கம் செய்யுமாறு நீதவான் வழங்கிய உத்தரவிற்கமைய, பொன்னகர் மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்திற்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் ஏனைய விசாரணைகளில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , உயிரிழந்த நபரின் மனைவியும் மனைவியின் காதலனும் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னுடைய காதலனுடன் சேர்ந்து, கணவனை தாக்கி கொலை செய்ததாக குறித்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, கைது செய்யப்பட்டு இருவரும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.