நல்லூர் கந்தனை வழிபட்ட சீன தூதுவர்

நல்லூர் கந்தனை வழிபட்ட சீன தூதுவர்

by Staff Writer 16-12-2021 | 12:00 PM
Colombo (News 1st) இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zenhong இன்று (16)  இரண்டாவது நாளாகவும் வட மாகாணத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருந்தார். யாழ். அரியாலையில் இலங்கை - சீன கூட்டு நிறுவனமாக இயங்கும் குயிலான் கடலட்டை இனப்பெருக்க நிலையத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்றிருந்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் அவரை வரவேற்றிருந்தனர். பின்னர் சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை பார்வையிட்டனர். இதேவேளை, யாழ். மாவட்ட மீனவ சம்மேளனங்களின் சமாசத்திற்கும் சீனத் தூதுவர் இன்று (16)  முற்பகல் சென்றிருந்தார். இதன்போது யாழ். மாவட்ட மீனவர்களுக்கான முதற்கட்ட வாழ்வாதார உதவிகளும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு இன்றும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (16) பிற்பகல் மன்னாரில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.