லிட்ரோ நிறுவனத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவு

சத்தியக்கடதாசி மூலம் விடயங்களை முன்வைக்குமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு

by Staff Writer 15-12-2021 | 6:56 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் சேர்மானங்கள் தொடர்பில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான தர நிலையொன்று தற்போது இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரத்தைக் கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே தமது நிறுவனத்தினால் விநியோகிக்கப்படுவதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. சந்தையிலுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுவதற்கும் குறிப்பிட்ட தரத்தில் புதிய சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என லிட்ரோ எரிவாறு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சத்தியக்கடதாசி மூலம் நாளை (16) மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகித்த எரிவாயு நிறுவனங்களுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்