புதிய சுகாதார வழிமுறைகள் வௌியீடு

விமான பயணிகளுக்கான புதிய சுகாதார வழிமுறைகள் வௌியீடு

by Staff Writer 11-12-2021 | 6:00 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், புதிய சுகாதார வழிமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ளார். அதற்கமைய, நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமான பயணிகளும் COVID தொற்று தடுப்புக்கான ஆவணங்களை கொண்டு வருதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. COVID -19 தடுப்பூசி ஏற்றியமைக்கான தடுப்பூசி அட்டை, தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்காக விமான பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட அறிக்கை ஆகியவற்றை கடவுச்சீட்டுடன் இணைத்து உறுதிப்படுத்தியிருத்தல் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் 12 வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கு COVID-19 தொற்றை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் PCR அறிக்கை அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். எனினும், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும், தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்துவதற்கு விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்ட PCR அறிக்கையின் ஆங்கில மொழி பிரதியை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு மூன்று மாதங்களுக்குள் COVID-19 தொற்று ஏற்பட்டிருக்குமாயின், குறித்த பயணி விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொண்ட Antigen அறிக்கையை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெஸதோவா, நமீபியா, சிம்பாப்வே மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளுக்கு நாட்டிற்கு நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.