உயர்நிலை கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் அவசியம்

உயர்நிலை கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் அவசியம்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 10-12-2021 | 1:52 PM
Colombo (News 1st) உயர்நிலை கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வி முறைமை தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லையென அவர் கூறியுள்ளார். இதனால் மூன்றாம் நிலை கல்வி முறைமையில் விசேட கவனம் செலுத்தி பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த பட்டப்படிப்பை தொடர்ந்தாலும் அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரிக்கப்பட்ட நிலையில், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையே இதற்கான காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.