எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணையை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

by Staff Writer 09-12-2021 | 1:02 PM
Colombo (News 1st) எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வரும் நிலையில், அரச நிறுவனங்கள் கவனக்குறைவாக செயற்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (09) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க, இலங்கை தரநிர்ணய சபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் பிரதிநிதிகள் இன்று (09) விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளனர். இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இலங்கை தரநிர்ணய சபையின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இன்று ஆஜராகுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று (09) காலை கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள லிட்ரோ ​எரிவாயு களஞ்சியத் தொகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.