இலங்கையர்களை பணியில் இணைத்துக்கொள்ள ஜப்பான் ஆர்வம்

இலங்கையர்களை பணியில் இணைத்துக்கொள்ள ஜப்பான் ஆர்வம்

by Bella Dalima 09-12-2021 | 5:59 PM
Colombo (News 1st) இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் மிஸூகொஷி ஹிதேகி (Mizukoshi Hideaki)பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் குறைந்த திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இதனடிப்படையில், இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு 14 துறைகளின் கீழ் பணியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமது பதவிக்காலத்திற்குள் இந்நாட்டின் முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக மிஸூகொஷி ஹிதேகி பிரதமருடனான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இலங்கையில் 75 ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டு காலப்பகுதிக்குள் சுமார் 382 மில்லியன் ஜப்பானிய டொலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதனூடாக 12,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.