குளிர்கால ஒலிம்பிக்போட்டிகளை ஆஸியும் புறக்கணித்தது

2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புடன் இணைந்த அவுஸ்திரேலியா

by Staff Writer 08-12-2021 | 8:25 AM
Colombo (News 1st) சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சீனா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய வீர, வீராங்கனைகளுக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக நேற்றைய தினம் (07) வௌ்ளை மாளிகை உறுதிப்படுத்திய நிலையில் அதனுடன் தற்போது அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் காரணமாக, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமது நாட்டின் சார்பாக அதிகாரிகள் அனுப்பப்பட மாட்டார்கள் என வெள்ளை மாளிகை நேற்று (07) அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் அமெரிக்க இராஜதந்திர முறையில் போட்டிகளை புறக்கணித்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி வழங்கப்படும் என சீனா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.