பாம்புக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியவர்

பாம்புக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியவர்; 1.8 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வீடு எரிந்து சாம்பலானது

by Bella Dalima 08-12-2021 | 4:01 PM
Colombo (News 1st) மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால், பாம்புக்கு பயந்து ஒருவர் தனது வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 10,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு வீட்டிற்கு பாம்புகள் அடிக்கடி அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. 1.8 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள அந்த வீட்டினுள் சம்பவத்தன்று நுழைந்த பாம்பினை விரட்டியடிக்க யோசித்த தொழிலதிபர் நிலக்கரி மூலம் புகையை ஏற்படுத்தி பாம்பை விரட்ட முடிவு செய்தார். இதன்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் ஒட்டுமொத்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது. சில நிமிடங்களிலேயே அந்த ஆடம்பர வீடு இருந்த இடம் தெரியாத அளவிற்கு சாம்பலாகிப் போனது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.