நினைவேந்தல் நடத்தியமைக்காக கைதான 10 பேருக்கு பிணை

நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்ட 10 பேருக்கு பிணை

by Staff Writer 08-12-2021 | 5:22 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை நீதவான் H.M.M.பசீல் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார். தலா 1 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என சந்தேகநபர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியமை தொடர்பில் கடந்த மே 18 ஆம் திகதி இரண்டு பெண்கள் உட்பட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால், வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.