எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு தாக்கல்

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

by Staff Writer 08-12-2021 | 5:07 PM
Colombo (News 1st) பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்த எரிவாயு நிறுவனங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக குற்றவியல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. சமூக செயற்பாட்டாளரான நாகானந்த கொடித்துவக்கினால் இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நட்டஈட்டை செலுத்த, லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் எழுத்தாணை மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை (09) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்