முறிகள் வழக்கின் 11 குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்ல முடியாது - நீதிமன்றம்

by Staff Writer 06-12-2021 | 2:03 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 22 குற்றச்சாட்டுகளில், 11 இலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேரை விடுதலை செய்யுமாறு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெதிகே உள்ளிட்டோர் அடங்கிய விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு இன்று (06)  எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனை தொடர்பிலான உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் குழாம், பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள போதிலும், தற்போது அந்நிறுவனம் இல்லை என்பதால் அதற்கெதிரான11 குற்றச்சாட்டுகளை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித சட்ட ஏற்பாடுகள் இல்லையென தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, பிரதிவாதிகளுக்கு எதிரான 22 குற்றச்சாட்டுக்களில், 11 குற்றச்சாட்டுகளை நீக்கிக்கொள்வதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.