by Staff Writer 04-12-2021 | 6:50 PM
Colombo (News 1st) பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (05) முதல் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரண்டு எரிவாயு நிறுவனங்களும் இறக்குமதி செய்த எரிவாயுவின் மாதிரிகளை கப்பலில் இருந்து பெற்று, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இறக்குமதி செய்த எரிவாயுவை விநியோகிக்காதிருப்பதற்கும், புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை விநியோகிப்பதற்கு முன்னர் உரிய தரத்திற்கு அமைய வாசத்தை உணர்ந்துகொள்வதற்கு Mercaptan இரசாயனத்தை சேர்ப்பதும் அவசியம் என நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்ட நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டரை பரிசோதித்து, அதற்கான தொடரிலக்கத்தை நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அனுப்ப வேண்டும் என அந்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை பூரணப்படுத்தி, தரத்தை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும்.
அதன் பின்னர் எரிவாயு தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த குழுவினூடாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.