இதுவரை 38 நாடுகளில் ஒமிக்ரோன் பரவல்

இதுவரை 38 நாடுகளில் ஒமிக்ரோன் பரவல்

by Bella Dalima 04-12-2021 | 2:36 PM
Colombo (News 1st) இதுவரை 38 நாடுகளில் ஒமிக்ரோன் (Omicron)பிறழ்வு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துமா, சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் எந்தளவு பயனை கொடுக்கும் என்பன தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வர இன்னும் சில வாரங்கள் தேவைப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் முதன்முறையாக அடையாளங்காணப்பட்ட இந்த பிறழ்வு, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 06 பிராந்தியங்களிலும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஒமிக்ரோன் பிறழ்விற்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிட்னியில் 13 பேர் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் 06 பிராந்தியங்களில் ஒமிக்ரோன் பிறழ்வு பரவியுள்ளது. மேரிலேண்ட், மிசூரி, யூட்டா, நெபர்ரஸ்கா மற்றும் பென்சில்வேனியா பிராந்தியங்களில் ஒமிக்ரோன் பிறழ்வு பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அமெரிக்காவில் டெல்டா பிறழ்வுடன் அடையாளங்காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.