கிழக்கில் மாற்றுத்திறனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கில் மாற்றுத்திறனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 03-12-2021 | 7:36 PM
Colombo (News 1st) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (03) இன்றாகும். பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளால் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வெருகல் பிரதேச சபைக்கு அருகில் இருந்து நடைபவனியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் தயாரித்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயற்திட்டத்தை அமுல் படுத்துமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியத் திட்டத்தை அமுல்படுத்துமாறும் தொழில் வாய்புகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுத்தருமாறும் வலியுறுத்தி திருகோணமலை 3 ஆம் கட்டை சந்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பதாதைகளை ஏந்தியவாறு மாற்றுத்திறனாளிகள் வீதி ஓரத்தில் நின்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டம் - கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. தமக்கான வேலைவாய்ப்புகள், போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதிக்கு முன்பாகவும் மாற்றுத்திறனாளிகளால் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.