ஒரு வாரத்தில் வடக்கில் 5 சடலங்கள் கரையொதுங்கின

by Staff Writer 03-12-2021 | 10:34 PM
Colombo (News 1st) கடந்த ஒரு வார காலத்திற்குள் வடக்கு கடற்கரை பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, சடலங்களைஅடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். யாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் நேற்று (02) சடலமொன்று கரையொதுங்கியது. பிரதேச மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். வெற்றிலைக்கேணி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, யாழ். வடமராட்சி - மணற்காடு, வல்வெட்டித்துறை - ஊரிக்காடு, யாழ். நெடுந்தீவு - ஒற்றைப்பனை கடற்பரப்புகளிலும் அடையாளம் காண முடியாத சடலங்கள் மீட்கப்பட்டன. கரையொதுங்கிய 03 சடலங்கள் பருத்தித்துறை வைத்தியசாலையிலும், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரு சடலமும் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சடலம், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்