Omicron தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

ஒமிக்ரோன் தொற்றுடன் நாட்டில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

by Staff Writer 03-12-2021 | 2:08 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் (Omicron) பிறழ்வு தொற்றுக்குள்ளான ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நைஜீரியாவிற்கு சென்று கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பிய ஒருவருக்கே Omicron பிறழ்வு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். புதிய கொரோனா பிறழ்வு பதிவாகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சமித் கினிகே குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஒரு மாதத்திற்குள் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டிற்கு சென்று வந்த இலங்கையர்கள் தொடர்பான தரவுகள் கேசரிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித் கினிகே கூறினார். அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, நைஜீரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித் கினிகே குறிப்பிட்டார். குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரின் குடும்ப உறுப்பினர்களையும் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, ஒமிக்ரோன் பிறழ்வை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மாதிரிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.