தக்காளி விலை 164% அதிகரிப்பு

by Staff Writer 02-12-2021 | 8:51 PM
Colombo (News 1st) உரம் மற்றும் இரசாயன பொருட்களுக்கான பிரச்சினையும் நாட்டின் அந்நியச் செலாவணி தொடர்பிலான பிரச்சினையும் உக்கிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு காரணங்களினால் சந்தையில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் துரிதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் படி, கடந்த வருடம் நவம்பர் மாதம் 109 ரூபா 78 சதமாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை தற்போது 162 ரூபா 50 சதமாக அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்குள் சம்பா அரிசியின் விலை 48 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மா ஒரு வருடத்திற்குள் 93 ரூபாவில் இருந்து 123 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 182 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் தற்போதைய விலை 259 ரூபாவாகும். 550 ரூபாவாக காணப்பட்ட மாசி கருவாட்டின் விலை 935 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 430 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி தற்போது 690 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது. 380 ரூபாவிற்கு விற்கப்பட்ட 400 கிராம் எடைகொண்ட பால் மா விலை 480 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளியின் விலை 164 வீதத்தினாலும் லீக்ஸ் விலை 188 வீதத்தினாலும் கத்தரிக்காய் 76 வீதத்தினாலும் போஞ்சி மற்றும் கரட் என்பவற்றின் விலை 70 வீதத்தினாலும் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயுவின் விலை ஒரு வருடத்திற்குள் 1257 ரூபாவால் அதிகரித்துள்ளது.