அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்தேனும் நாட்டிற்காக கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயார் என்கிறார் பிரதமர்

by Bella Dalima 02-12-2021 | 7:20 PM
Colombo (News 1st) அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்து கடினமான தீர்மானங்களை எடுக்கும் யுகத்தை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கு எசிதிசி காப்புறுதி பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார். காப்புறுதியை பெறும் ஐந்து ஊடகவியலாளர்களுக்கு பிரதமரால் இதன்போது காப்புறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. எசிதிசி காப்புறுதி திட்டத்தில் சுமார் 3000 ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட பிரதமர், ஊடகங்களால் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும். எனினும், அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது என குறிப்பிட்டார். அரசாங்கத்தில் உள்ளவர்களால் அரசாங்கத்தை பாதுகாக்க முடியுமே தவிர, ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்க முயன்றால், தற்போது வழங்குவதை விட பெரிய காப்புறுதியை வழங்க வேண்டியேற்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலத்தையே தமது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாகவும், அவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கும் தாய் தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.