by Staff Writer 02-12-2021 | 8:57 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் மிச்சிக்கன் (Michigan) மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பயங்கரவாதம் மற்றும் முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வருட மாணவன் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர் திட்டமிட்டே தாக்குதலை மேற்கொண்டமைக்கான டிஜிட்டல் ஆதாரமுள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு முதல் நாள், சந்தேகநபர் வௌியிட்டுள்ள காணொளி அதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று (01) நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் ஆசிரியர் ஒருவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
15 வயதான சந்தேகநபர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி 15 தொடக்கம் 20 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.