நட்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை

வீதி விபத்துகளில் உயிரிழப்போருக்கான நட்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 01-12-2021 | 4:30 PM
Colombo (News 1st) காரணம் தெரியாத வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது வழங்கப்படும் தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு இதுவரை வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை இரண்டரை இலட்சம் ரூபாவாக செலுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைவோருக்கு வழங்கப்படும் 1 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.