கடமை நேரத்தின் பின்னர் எவ்வித சேவைகளிலும் ஈடுபட போவதில்லை: மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவிப்பு

by Staff Writer 01-12-2021 | 4:12 PM
Colombo (News 1st) 8 மணித்தியால கடமை நேரத்தின் பின்னர் ஏற்படும் திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை குறிப்பிட்டார். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் மாலை 4.15-க்கு பின்னர் ஏற்படக்கூடிய திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கை இன்று வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், இன்று முதல் கடமை நேரத்தின் பின்னர் எவ்வித சேவைகளிலும் ஈடுபட போவதில்லை என சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும், முறையற்ற சட்டங்களுக்கு எதிராகவும் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு சுட்டிக்காட்டினார்.