Omicron கொவிட் பிறழ்வு நோய் அறிகுறியில் மாற்றம்

by Staff Writer 28-11-2021 | 10:05 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் (Omicron) புதிய கொவிட் பிறழ்வு இலங்கையில் பரவுவதை தவிர்க்க முடியாது எனவும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிய கொரோனா பிறழ்வு பரவிவரும் நிலையில் இஸ்ரேல் இன்று (28) முதல் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளது. ஒமிக்ரோன் புதிய கொவிட் பிறழ்வு தொற்றியவர்களிடம் சிறியளவு நோய் அறிகுறி மாத்திரமே தென்படுவதாக தென்னாபிரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களிடம் சுவை இழப்பு மற்றும் வாசனைகளை உணர முடியாமை போன்ற நோய் அறிகுறிகள் தென்படவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி, வைத்தியர் எஞ்சலிக் கொட்சி கூறியுள்ளார். புதிய பிறழ்வு தொற்றியவர்களிடம் தசை வலி, சோர்வுத் தன்மை சுமார் இரு நாட்கள் காணப்படும் எனவும் சிறிதளவு இருமல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரோன் பிறழ்வு எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மதிப்பீடு செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவை என்பதே அவரது நிலைப்பாடாகும். எவ்வாறாயினும் தற்போதைய தகவல்களுக்கு அமை இந்த தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய பிறழ்வு நாட்டில் பரவுவதை தவிர்க்க முடியாது எனவும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.