by Staff Writer 27-11-2021 | 3:26 PM
Colombo (News 1st) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டிற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், சவாலான காலங்களில் பணிகளை இடைநிறுத்த இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தேவையான முடிவுகளை துரிதப்படுத்தி உரிய பணிகளை சட்டப்படி முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கட்டுமானத்திற்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியறுத்தியுள்ளார்.