மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான மனுக்கள் பரிசீலனை

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான மனுக்களை நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்க தீர்மானம் 

by Bella Dalima 26-11-2021 | 3:04 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குதல் மற்றும் திரவ வாயு விநியோகத்திற்கான குத்தகையை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குதல் என்பன குறித்து அமைச்சரவையினால் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பீ. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்களை பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, காமினி அமரசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் தாம் மன்றில் ஆஜராவதாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர் , இலங்கை மின்சார சபையின் தலைவர் , பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 48 பேர் இந்த அடிப்படை உரிமை மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.