சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை

இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை

by Bella Dalima 26-11-2021 | 3:27 PM
Colombo (News 1st) நாட்டிற்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தராதர அங்கீகார சபைக்கு அறிவித்துள்ளாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் 2 வாரங்களுக்குள் சர்வதேச ரீதியில் பரிசோதனைக்குட்படுத்தும் இரசாயன முறைமையை நாட்டில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தராதர அங்கீகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டிலுள்ள எரிவாயு சிலிண்டர்களின் தரம் குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார். மேலுமொரு தனியார் நிறுவனமும் பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலதிக பரிசோதனைகளுக்காக எரிவாயு சிலிண்டரின் மாதிரிகளும் நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக பெறப்பட்டுள்ளன. கொட்டாவ - பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் நேற்று அதிகாலை எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அரச இரசாயன பகுப்பாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.