தென்னாபிரிக்காவில் பரவும் புதிய COVID-19 பிறழ்வு

ஆபத்தான புதிய COVID-19 பிறழ்வு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிப்பு

by Bella Dalima 26-11-2021 | 4:29 PM
Colombo (News 1st) அதிக எண்ணிக்கையிலான திரிபுகளுடன் கூடிய புதிய COVID-19 பிறழ்வு தென்னாபிரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இம்மாத ஆரம்பத்தில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்துள்ளது. அதிக பிறழ்வுகளைக் கொண்ட இந்த புதிய பிறழ்விற்கு B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய பெயர் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கொரோனா பிறழ்வு பொட்ஸ்வானா மற்றும் ஹொங்கொங்கில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து பயணித்தவர்களிடமிருந்தே B.1.1.529 பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பிறழ்வில் இந்த B.1.1.529 பிறழ்வு மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, B.1.1.529 மிக வேகமாக பரவக்கூடியதெனவும் இந்த பிறழ்வை தடுப்பதில் தடுப்பூசிகளின் செயற்றிறன் மந்தகதியில் காணப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு கண்டறியப்பட்டதன் பின்னர், 6 ஆபிரிக்க நாடுகளுக்கு பிரித்தானியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், 6 நாடுகள் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சாஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா பிறழ்வு மிகவும் ஆபத்து மிக்கதென விஞ்ஞானிகள் அறிவித்ததை அடுத்து, குறித்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்ட B.1.1.529 பிறழ்வு, முன்பு கண்டறியப்பட்ட பிறழ்வுகளை விட மிகவும் ஆபத்து மிக்கதென விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.