நவம்பர் மாதத்தில் மாத்திரம் நான்காவது கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவு

by Staff Writer 25-11-2021 | 10:09 PM
Colombo (News 1st) எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் ஒன்று இன்றும் (25) பதிவானது. நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் இடம்பெற்ற நான்காவது எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கொட்டாவ - பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் இன்று அதிகாலை சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக, 2021 மார்ச் 03 ஆம் திகதி மருதானை - சங்கராஜ மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் பதிவானது. 2021 நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட சுற்றுலா விடுதியில் வெடிப்புச் சம்பவம் பதிவானது. 2021 நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்திற்கு அருகே தனியார் உணவு விற்பனை நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவானது. 2021 நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பு ரீட் மாவத்தையிலுள்ள சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனமொன்றுக்கு சொந்தமான உணவக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. கொழும்பு 7 மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகள்​ எரிவாயு கசிவு காரணமாக நிகழ்ந்த விபத்துகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.