தெதுறு ஓயாவை அண்மித்து வௌ்ள அபாய எச்சரிக்கை

தெதுறு ஓயாவை அண்மித்து வௌ்ள அபாய எச்சரிக்கை

by Staff Writer 25-11-2021 | 1:04 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகள் இன்று (25)  திறக்கப்பட்டுள்ளன. பலத்த மழையால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்தால், அதிகளவு நீர் திறக்கப்படும் எனவும் இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெதுறு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வாரியபொல, நிகவரெட்டிய, மஹவ, கொப்பெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டு மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வௌ்ள அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கதில் 08 வான் கதவுகள் இன்று (25) மாலை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களும் வான்மட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.