யாழ். பாசையூர் மீனவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்பு

by Staff Writer 23-11-2021 | 5:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பாசையூரை சேர்ந்த மீனவர் ஒருவர் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கௌதாரிமுனை பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (23) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கரையொதுங்கிய சடலம் பாசையூரை சேர்ந்த மீனவருடையது என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை (20) கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன 41 வயதான மீனவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.