2021 அரச வானொலி விருது வழங்கல் விழா; சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை ஜெப்ரி ஜெபதர்ஷன் சுவீகரித்தார்

by Staff Writer 22-11-2021 | 7:14 PM
Colombo (News 1st) 2021 வானொலி அரச விருது விழா, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றது. இவ்வாண்டுக்கான சிறந்த தமிழ் ஆண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ்பெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் சுப்ரமணியம் சுவீகரித்தார். இதனிடையே, ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சிபூர்வ நிகழ்ச்சியாக ''வணக்கம் தாயகம்'' நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டதுடன் இதற்கான விருதை ஞானகுமாரன் கணாதீபன் பெற்றார். ஆண்டின் சிறந்த நேர்காணல் நிகழ்ச்சியாக ''மாலை எக்ஸ்பிரஸ்'' நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டதுடன் இதற்கான விருதை வனிதா பரமேஷ்வரன் பெற்றுக் கொண்டார். அத்துடன், 2021 ஆம் ஆண்டின் சிறந்த மாலை நேர நிகழ்ச்சிக்கான விருதை ''ஆனந்த இரவு'' நிகழ்ச்சிக்காக கீர்த்தனன் பாக்கியராஜா சுவீகரித்தார். இதனிடையே, சிறந்த வானொலி சிறு விளம்பரத்திற்கான ஊக்குவிப்பு சான்றிதழை ''வணக்கம் தாயகம்'' நிகழ்ச்சிக்காக சக்தி FM இன் வேர்ள் பிரஜீவ் பெற்றுக் கொண்டார். அத்துடன் சிறந்த நிகழ்ச்சி முன்னறிவிப்பு குறியிசைக்கான ஊக்குவிப்பு சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த வானொலி நாடக சிறுவர் நடிகருக்கான ஊக்குவிப்புச் சான்றிதழை ''கிருமி'' நாடகத்திற்காக சஹார்ஷ் பிரஜீவ் பெற்றார். சிறந்த வானொலி நாடக தயாரிப்புக்கான ஊக்குவிப்புச் சான்றிதழ், கிருமி நாடகத்திற்காக அறிவிப்பாளர் ஆரணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆக்கபூர்வமான வானொலி விளம்பரத்திற்கான ஊக்குவிப்பு சான்றிதழை சக்தி FM இன் ஒஸ்மன் ஜே பெற்றுக் கொண்டார். ஆண்டின் சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதுக்கு நியூஸ்பெஸ்ட்டின் கிறிஸ்டினா ரட்ணம் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.