24 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் சக்தி FM

by Staff Writer 20-11-2021 | 1:29 PM
Colombo (News 1st) இலங்கை வானொலித்துறையில் புதுமைகளின் முன்னோடியாய் திகழும் சக்தி Fm-இன் 23 ஆவது அகவை பூர்த்தி இன்றாகும். 24 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் சக்தி FM-இற்கு நியூஸ்ஃபெஸ்ட் சார்பாகவும் நேயர்கள் சார்பாகவும் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இலங்கையின் வானொலித்துறையில் இரு தசாப்தம் தாண்டி புதுமைகளோடு தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் மொழியின் சக்தியாய் வலம் வரும் "சக்தி FM" இன்று தனது 23 ஆவது அகவை பூர்த்தியை கொண்டாடுகின்றது. 1998 ஆம் ஆண்டு வானலையில் தன் முதல் தடத்தை பதித்த சக்தி FM, 23 ஆண்டுகளாக மக்களின் சக்தியாக மக்களோடு பயணிக்கின்றது. துல்லியமான ஒலியுடன் உலகெங்கும் டிஜிட்டல் தளமூடாகவும் ஆட்சி செய்கிறது. எப்போதும் தன்னிகரில்லா சேவையை வழங்கும் தனித்துவ வானொலி சக்தி FM, மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கரம்கொடுப்பதில் பின்நின்றதில்லை. சக்தி FM தரமான நிகழ்ச்சிகளை புதுமைகளோடு நேயர்களின் இரசனைக்கு ஏற்ப வழங்குவதோடு மாத்திரமல்லாது , மக்களின் தேவையறிந்து அவற்றை தகுந்த நேரத்தில் நிவர்த்தி செய்து மக்களின் சக்தியாய் பரிணாமம் கண்டுள்ளது. சக்தியின் அகரம், வரம், சக்தி சங்கமம், பிரம்மாண்ட நேரடி கலையகம், மக்கள் சக்தி, புத்தகப்புரட்சி, நம்ம ஹிட்ஸ், சக்தி ரேடியோ Superstar என பல்வேறு துறைசார் புரட்சிகளை உருவாக்கிய பெருமையும் சக்தி FM-இற்கே உரியது. இவற்றை தவிர வானொலிகளின் முன்னோடியாக இளையவர்கள் திறமைகளை வெளிக்காட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளை உருவாக்கி, வழங்கி வருவதோடு காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது.