by Staff Writer 19-11-2021 | 1:43 PM
Colombo (News 1st) சீனாவின் Qingdao Seawin Biotech Group Co. Ltd. நிறுவனத்தின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (19) தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றால் சீனாவின் சேதன பசளை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு தொடர்பில் சீன நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதியால் இன்று எழுத்துமூல ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டது.
சீன சேதன பசளையில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா காணப்படுவதாக தேசிய தாவர தடுப்பு காப்பு சேவை நிறுவனம் இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்தமையால், அந்த சேதன பசளையை நிராகரிக்க விவசாய அமைச்சு தீர்மானித்தது.
சேதன பசளை கொள்வனவிற்காக விநியோகிக்கப்பட்ட கடன் கடிதத்திற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு தடை விதிக்குமாறு இரண்டு அரச உர நிறுவனங்கள் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன
எவ்வாறாயினும், சீனாவின் 20,000 மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் வருகை தந்த Hippo Spirit கப்பல் தொடர்ந்தும் இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.