சாரா ஹல்டனுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

by Staff Writer 18-11-2021 | 5:25 PM
Colombo (News 1st) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை (Sarah Hulton) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். இன்று (17) காலை கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஐ.நா பிரேரணை சம்பந்தமாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஈழ மக்கள் விடுதலை இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம், அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினை, 13 ஆவது திருத்த சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.