பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு - DMC

by Staff Writer 17-11-2021 | 7:57 AM
Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் ருவன்வெல்ல, மாவனெல்ல, கலிகமுவ, தெஹியோவிட்ட, கேகாலை, தெரணியல, யட்டியாந்தோட்டை, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.