எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 17-11-2021 | 7:25 PM
Colombo (News 1st) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது அதனை விற்பதற்கான ஒரு படிமுறையென அவர்கள் தெரிவித்தனர். பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம், வணிக கைத்தொழில் மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் பெட்ரோலியக் கிளை உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் சுத்திகரிப்பை மீண்டும் மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுத்தருமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர். சுத்திகரிப்பு நிலையம் செயலிழப்பதற்கான காரணம் தொடர்பில் பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அஷோக்க ரங்வல பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
சுத்திகரிப்பு இருந்தால் தான் எமது இறைமை பாதுகாக்கப்படும். மசகு எண்ணெயை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை சுத்திகரிப்பு பிரதான அலுவலகம் தயாரித்துள்ளது. இவ்வாறு திட்டமொன்று உள்ளமை தொடர்பில் நாம் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். இவ்வாறு செய்தால் நவம்பர் 15 ஆம் திகதி 8 தாங்கிகளில் மசகு எண்ணெய் தேங்கும் என கூறினோம். எனினும், அமைச்சரால் முடியவில்லை. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு இது மாறியது. அதன் பிரதிபலனாகவே அந்த சுத்திகரிப்பு மசகு எண்ணெய் இல்லாமல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இதனிடையே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமை எரிபொருள் விநியோகத்திற்கு தடையாக அமையாது என எரிசக்தி அமைச்சர் இன்றும் சுட்டிக்காட்டினார்.