இலங்கையருக்கு பத்மஶ்ரீ விருது

இலங்கையின் முன்னணி நடனக் கலைஞருக்கு பத்ம ஸ்ரீ விருது

by Bella Dalima 17-11-2021 | 5:31 PM
Colombo (News 1st) இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச்சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேனவிற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் H.E.கோபால் பாக்லேவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்கான கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவிற்கு கடந்த 08 ஆம் திகதி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த 08 ஆம் திகதி இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்திடம் பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில், அவரது மகள் வத்சலா தசநாயக்க பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார். கலாநிதி பண்டித் W.A.அமரதேவ 2002 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.