SJB பேரணிக்காக கொழும்பு வர முற்பட்டவர்களுக்கு பொலிஸாரால் இடையூறு

by Staff Writer 16-11-2021 | 11:16 AM
Colombo (News 1st) மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மக்களின் குரலிலேயே நாட்டுக்கு கூறுவதற்கு இடமளிக்கும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரினால் இடையூறு ஏற்பட்டது. இந்த தடைகளுக்கு மத்தியிலும் மக்கள் கொழும்பிற்கு வருகை தந்தவண்ணமுள்ளனர். எவ்வாறாயினும், கண்டியில் இருந்து பேரணிக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியினரை போகம்பறை சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர். இதனிடையே, கொழும்பு - களுத்துறை மாவட்ட நுழைவாயிலினூடாக கொழும்பிற்குள் வருகை தரும் அனைத்து பஸ்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பாணந்துறை தெற்கு பிராந்திய பொலிஸாரினால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் அனுராதபுரத்தில் இருந்து வருகை வந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அனுராதபுர எல்லையை கடப்பதற்கு இராஜாங்கனை பொலிஸாரினால் அனுமதி வழங்கப்படவில்லை. நுகெகொட மேம்பாலத்துக்கு அருகாமையில் ஹைலெவல் வீதியூடாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்புக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.