ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு

ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

by Staff Writer 16-11-2021 | 10:19 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலில் படகு மோதியதில் உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் பாதுகாப்புடன் நாளை மறுதினம் (18) மீனவரின் உடலை தோண்டி எடுத்து பின் மறு உடற்கூராய்வு செய்து எதிர்வரும் 24 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர் ராஜ்கிரணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த மீனவரது மனைவியின் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை எனவும் நீதிபதி தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி யாழ். கோவளம் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினர் அவர்களை கைது செய்ய முனைந்தனர். இதன்போது, கடற்படையினரின் கப்பலில் இவர்களது படகு மோதி விபத்திற்குள்ளானதில் ராஜ்கிரண் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஏனைய இருவரையும் கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு தெரிவித்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.