அங்கொட லொக்கா உயிரிழந்தமை உறுதியானது

தமிழகத்தில் உயிரிழந்தது அங்கொட லொக்கா: DNA பரிசோதனையில் உறுதி

by Staff Writer 16-11-2021 | 5:02 PM
Colombo (News 1st) தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்தது இலங்கையின் பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என்பது DNA பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதாள உலகக்குழுவின் உறுப்பினராக செயற்பட்ட அங்கொட லொக்கா இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் உயிரிழந்திருந்தார். கோவை, சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி என அறியப்படும் அம்மானி தான்ஜியுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொட லொக்கா, 2020 ஜூலை 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் போலிச்சான்றிதழ் பெற்று அங்கொட லொக்காவின் சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் அம்மானி தான்ஜி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.