ஆங் சான் சூ கிக்கு சிறப்பான பராமரிப்பு கிடைக்கிறது

ஆங் சான் சூ கிக்கு சிறந்த பராமரிப்பு கிடைப்பதாக மியன்மார் இராணுவம் அறிவிப்பு

by Staff Writer 16-11-2021 | 11:05 AM
  Colombo (News 1st) மியன்மாரில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சிவில் நிர்வாகத்தலைவர் ஆங் சான் சூ கி (Aung San Suu Kyi) சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவக் கிளர்ச்சியின் மூலம் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட 76 வயதான ஆங் சான் சூ கி, அதன்பின்னர் பொது வௌியில் பிரசன்னமாகவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், முன்னர் வாழ்ந்து வந்தவர்களுடனேயே தற்போதும் வாழ்ந்து வருவதாக மியன்மார் இராணுவப் பேச்சாளர் கூறினார். அவருக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதிலும், அவர் உண்ண விரும்புவது எதுவாகினும் அதனைக் கொடுப்பதற்கும் தம்மாலான அனைத்தையும் செய்வதாக அவர் கூறினார். மியன்மார் நீதிமன்றத்தினால் 11 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் Danny Fenster விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் BBC இற்கு வழங்கிய நேர்காணலிலேயே மியன்மார் இராணுவப்பேச்சாளர் இதனைக்குறிப்பிட்டார். பெப்ரவரி இராணுவக் கிளர்ச்சியின் பின்னர் ஏராளமான ஊடகவியலாளர்களும்  ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.