இனப்பரம்பலை மாற்றமுயற்சி: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்ட இனப்பரம்பலை மாற்ற முயற்சிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 15-11-2021 | 9:47 PM
Colombo (News 1st) வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து இன்று (15) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் சில தமிழ் அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பிரதேச சபையிலிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கோரி, வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.