அங்கொட லொக்காவின் 2 சகாக்கள் பெங்களூரில் கைது

அங்கொட லொக்காவின் 2 சகாக்கள் பெங்களூரில் கைது

by Staff Writer 14-11-2021 | 10:27 PM
Colombo (News 1st) நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான அங்கொட லொக்காவின் சகாக்கள் இருவர், பெங்களூருவில் இந்திய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற அங்கொட லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில் கோவை - சேரன்மாநகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த வரும் ஜூலை 4 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார். கோயம்புத்தூர் அரச மருத்துவமனைக்கு போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து பெறப்பட்ட அங்கொட லொக்காவின் சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டமை பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இந்தியாவின் மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அங்கொட லொக்காவின் காதலி என கூறப்படுகின்ற இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் அமானி தான்ஜி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த அவரது இரண்டு நண்பர்களும் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த அந்துரகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான சனுக்க தனநாயக, பெங்களூருவை சேர்ந்த 46 வயதான கோபாலகிருஷ்ணன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் கோயம்புத்தூர் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பெருந்துறை கிளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.