மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 12,000 குடும்பங்கள்

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 12,000 குடும்பங்கள்; பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

by Bella Dalima 12-11-2021 | 2:01 PM
Colombo (News 1st) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அபாய வலயத்திற்குள் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார். கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாய வலயத்திற்குள் மக்கள் வசிப்பதாக அவர் கூறினார். இவ்வாறானவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயமானது எனவும் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார். இதேவேளை, மழை காரணமாக சில பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுநுவர, கங்கவட்டகோரளை, பஸ்பாக கோரளை, யட்டிநுவர, உடபலாத்த, ஹாரிஸ்பத்துவ, கங்க இஹல கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, ரம்புக்கனை, அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல, புலத்கொஹூபிட்டிய, வரக்காபொல, தெஹியோவிட்ட, கலிகமுவ, தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் குருநாகல் மாவட்டத்தின் மல்லவபிட்டிய, அலவ்வ, மாவத்தகம, பொல்கஹாவெல, ரிதிகம, நாரம்மல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் வௌியேறுவதற்கான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்களுக்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, மத்துகம, புலத்சிங்கள, தொடங்கொட மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் பஹத்ததும்பற, மினிபே, மெததும்பற, பூஜாபிட்டிய, உடதும்பற, தெல்தோட்டை, அக்குரணை, அத்தரலியத்த, பன்வில மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ, அக்மீமன, நாகொட, காலி, கடவஸ்சத்தர, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, அத்தனகல மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் வல்லேபொல, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, ஹங்குரங்கெத்த, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, கிரியெல்ல நிவித்திகல, குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.